பறந்து விரிந்திருக்கும் இந்தப் பதிவுலகின் படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தவனுக்கு,
'வார்த்தைகளில் யாழிசைக்கும் கவிஞன் கமலேஷிடமிருந்து அழைப்பு, பதிவுலகில் நான் என்ற தொடர் பதிவிற்கு.
பலமுறை யோசிக்கிறேன், வியப்பாய் இருந்தது, கவிதை தவிர பதிக்கப்போகும் முதல் பதிவே தொடர்பதிவெனும் போது சற்று மிரட்சியும் (உண்மைய சொல்லனும்னா, இப்ப என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு, இத எழுதுற).
கமலேஷிற்கு நன்றி கூறி, தொடர்கிறேன்,
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மார்கண்டேயன்.
2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆம், என்னுடைய பெயர் மிக சகஜமான பெயராதலால், எங்கள் குடும்பப்பெயர் சற்று மாறுதலாக இருந்ததால் வைத்துவிட்டேன்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
அது ஒரு அதிகாலை பொழுது, அடர்ந்த காடு, ஒற்றையடிப் பாதையில் நான், தூரத்தில் விழும் அருவி, பறவைகளின் இன்னிசை, பரவசங்களுடன் கூடிய பயணம், மெல்லிய புகை மூட்டம், சற்று அடர்த்தியாக,
தூரத்தில் ஒரு ஒளிக்கற்றை, திடீரென்று ஒரு பேரொளி, அதைத் தொடர்ந்த ஒரு இனிமையான குரல்,
"வா, மகனே, வா, நான் தான் தமிழ்த் தாய், எத்தனை வலைப்பதிவுகள் இருந்தாலும், உன் எழுத்துக்கள் இல்லாமல் . . . ",
மடேர், வாகனங்களின் பேரிரைச்சல், ரோட்டுல போகும் போதும் கனவா, டேய், வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா . . .
சகஜ நிலைக்கு வந்து, அப்ப ஒரு ப்ளாக ஆரம்பிச்சே தீரனும், நிற்க,
தனிமை நிழலான போது,
தவிக்கச் செய்த நினைவுகள்
தலை தூக்க,
தவித்துப் போன நெஞ்சின்
தவிப்புகள் தலையெடுக்க,
தவறியதெல்லாம் தட்டச்சாகி பதிவுகளாய் . . .
மேற்கூறியது தான் உண்மை.
இருப்பினும், வலையுலகத்திற்கு வரச் செய்ததில் முக்கிய பங்கு,
இரவுப்பாடகன் கவிதைகள், பின்னர்
மின்பாக்கள்,
ப்ரியனின் ப்ரிய வரிகள், அப்போது கூட, வலையுலகம் முழுமையாய் தெரியாது, பின்னர்
ஒ மகசீயா விற்கான விளக்கம் கண்டவுடன், அங்கே பின்னூட்டம் எழுதியவர்களை தொடர்ந்து அறிந்த பின் இப்படியொரு உலகம் இருப்பது தெரிந்தது.
அப்பவே தெரிஞ்சிடுச்சு, நிறைய பேரு நல்லா எழுதுறாங்க, அதனால, எழுத தெரிஞ்சத மட்டும் எழுதிட்டு பேசாம இருக்கனும்ன்னு, சோ, அத மெய்ண்டைன் பண்ணிட்டிருக்கேன்,
4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
ஆரம்பத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்களுக்கெல்லாம் மெயில் அனுப்பி கஷ்டப்படுத்துனேன், இப்ப நான் செஞ்ச தப்ப உணர்ந்து திருத்திக்கிட்டேன்,
மற்றபடி, நிறைய பேருடைய வலைப்பதிவுல பின்னூட்டம் போடுறதுனால, சில பேரு வந்து பாத்துட்டு போறாங்க, அது போதும்.
ரெண்டு, மூணு, மின் குழுமத்துல மட்டும், தெரிவிக்கிறேன், அவ்வளவுதான்.
5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நான் உணர்ந்த விஷயங்கள் எழுதும் போது, என் உணர்வுகள் வருவது இயற்கை, என் உணர்வுகள் ஏதாவது ஒரு எடத்துலயாவது ஓட்டிட்டு இருக்கும், அவ்வளவு தான்.
விளைவு: பிடிக்கிறவங்க படிப்பாங்க, இல்லன்னா சுலபமா நிராகரிச்சுருவாங்க.
6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இரண்டுமில்லை, கையாலாகாதவன், கவிதைகளில் மட்டுமே கதைக்கிறேன், பிறகு வழக்கம் போல, சூழலுக்கேற்ப சுற்ற ஆரம்பிக்கிறேன்,
இந்த ஒரு இடத்திலாவது, பணம் என்பதைத் தள்ளி வைத்திருக்கிறேன்.
7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
இரண்டு, ஒன்று இந்தப் பதிவு, மற்றொன்று,
ஸௌராஷ்ட்ர மொழிக்காக: சில மென்பொருட்கள் உருவான பின் தொடர்வேன்.
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?
பொறாமை, கோபம், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிடுகிறது சிலருடைய பதிவுகள். மீண்டும், மீண்டும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய என்ற உணர்வே
மேலோங்குகிறது.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் பாராட்டினார்கள், அது
இங்கே, பின்னூட்டம் மூலம் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து ஊக்குவிப்பவர்கள்,
நமசிவாய ஈஸ்வரி,
சுயம் தேடும் பறவையாய் சுகம் தந்து கொண்டிருக்கும் கமலேஷ், மற்றும் பின்னூட்டமிடும் அனைவரும்.
10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
தேவையானதை
இங்கேயே தெரிவித்திருக்கிறேன், இதுக்கும் மேலன்னா . . வேணாம், (தம்பட்டம், தண்டோரா போட்டாச்சு, இதுக்கு மேல சொறின்ஜோம்னா ரத்தம் வருமாமே . . .).
உன்னிடத்தில் நீ நிலைக்காதவரை பிறருக்கு போதிக்கும் அதிகாரமில்லை . . . என்ற பாலகுமாரனின் வரிகள் பலமுறை யோசிக்க வைக்கிறது. இத சொல்றதுக்கும் அதிகாரம் இருக்கா (??!!) தெரியல.
இந்த நட்பு வளையத்தில் நான் கோர்க்க நினைக்கும் நல்லிதயங்கள்:
சகோதரி
நமசிவாய ஈஸ்வரி,
நண்பர்
இரவுப்பாடகன்,
நண்பர்
கூடல் குமரன்.
நண்பர்
தனி காட்டு ராஜா
நண்பர்
கொன்றல் காற்றோன் ராஜன்
மற்றும்
நண்பர்
பெய்யெனப் பெய்யும் மழை பிரதீப்
தட்டுத் தடுமாறி எழுதி முடிச்சிர்க்கேன், பாத்து குத்துங்கப்பு . . .
அழைப்பினை ஏற்று, தொடர்ந்த
பிரதீபிற்கு மிக்க நன்றி,
அழைப்பினை ஏற்று, தொடர்ந்த
தனி காட்டு ராஜாவுக்கு மிக்க நன்றி,