மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Thursday, September 30, 2010

சிறப்பு அடையாள அட்டை

நண்பர்களே, இந்த இடுகை பதிவர் செந்தில் அவர்களின் இடுகையை படித்தவுடன், இந்த விஷயத்தில் என் எண்ணங்களை பின்னூட்டமாக வெளிட்டுவிட்டு, சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே,

சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து அதற்க்கான ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கே காணலாம்.

பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.

இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே.

இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:

முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும். (நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):

பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.

அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.

௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).

மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)

முதல் முயற்ச்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதைச் சரி பார்ப்பதே.

இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.

இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:

தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.

ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

ஒரு, பாரத நாட்டினனாக, என்னாலான முயற்ச்சியை ('சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தினை' மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு) இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.

என் எண்ணங்களை ஏற்று, செயல்படுத்த அனுமதியளித்தால் என்னால் இயன்றதைச் செய்ய உள்ளேன்.

அனுமதி கிடைத்த பின், அது பற்றிய விவரம், இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.


இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.

பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

மேலும், இந்தப் பதிவை அப்படியேவோ அல்லது தங்கள் எண்ணங்களை கொடுத்து 'மீள் பதிவாகவோ' எந்தப் பதிவர் வேண்டுமானாலும் பதிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம். அந்தத் தகவலைத் தெரிவித்தால், இந்தப் பதிவிலும் இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் மேலான அன்பையும், ஆதரவினையும் நாடுகின்றேன்.

இவ்விஷயத்தை முதலில் பதிவிட்ட திரு. கார்க்கி அவர்களுக்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. கார்க்கி அவர்களின் பதிவிலிருந்து தன் வலைப்பூவிலும் பதிவிட்ட திரு. ரவிக்குமார் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பதிவு, ஈகரையிலும் பதிக்கப் பெற்றதை (02.10.2010) இன்று தான் (18.11.2010) அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.


'சிறப்பு அடையாள அட்டை' பதிவிற்கான தொடர்பினை தங்கள் வலைத்தளத்தில் ஏற்படுத்திக் கொடுத்த (02.12.2010) மதிப்பிற்குரிய பதிவர் இட்லி வடை அவர்களுக்கு மிக்க நன்றி,

இப்பதிவினை மீள் பதிவிட்ட ஆஷா சில்வியா அவர்களுக்கு மிக்க நன்றி. 

Thursday, September 23, 2010

காலச்சுவடுகள் . . .

பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,

எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,

முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,

எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,

மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,

காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .

நன்றி, வார்ப்பு.

Sunday, September 12, 2010

என்னோட ராவுகள் . . .

நெறைய மதுரக்காரங்க, மதுரைய பத்தி (முக்கியமா மதுர 'நைட்ட') எழுதுனதுல, எனக்கும் ரங்கராட்டினம் (எத்தன நாள் தான், கொசுவத்தி, சைக்கிள் சுத்துறது, மாமு கண்டுக்காதீங்க . . .) ரிவர்சுல சுத்திடுச்சு . . . நிறுத்த முடியலியே, அப்பறம் என்னாச்சுன்னா . . . இந்தப் பதிவு (கிழிஞ்சது போ ன்னு சொலறது காதுல கேக்குது) . . .

நானும் யோசிச்சு, யோசிச்சு பாக்குறேன், 'அது ஒரு கனாக்காலம்' எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியாத் தெரியல . . .

இருந்தாலும், 'அவளோட ராவுகள்' பார்த்து (போஸ்டரத் தான் ன்னு சொன்ன நம்பவா போறீங்க ?!!) நின்னத, வீட்ல யாரோ போட்டுக்கொடுக்க, தெனோம், ஒழுங்கா ஸ்கூலுக்கு போகும் போது வழிய மட்டும் பாத்துப்போன்னு சொல்ல ஆரம்பிச்சத . . . ஒரு வழியா காலேஜு தர்ட் இயற் படிச்சு முடிச்ச உடனே நிறுத்திட்டாங்க (அதுக்கு மேல சொல்ல முடியல, ஏன்னா . . . படிக்கிறதுக்கு வெளியில போயிட்டோம்ல)

அப்பாடா, அவளோட ராவுகள்ள இருந்து, என்னோட ராவுகள் ஞாபகத்துக்கு வந்துர்ச்சு . . .
கிட்டி புல்லு, குண்டு, பூந்தா, படமாட்டே, சைன் வெளி (பம்பரம்), அப்படி பாலரெங்கபுரத்துல போயிகிட்டிருந்த பொழுதுல, பத்தாவது படிக்கிற வரைக்கும் நைட் ஸ்டடிக்கு அவசியம் வரல (அப்பிடின்னா ஒழுங்கா படிச்சிட்டிருந்ததா . . . அர்த்தம்),

பத்தாவது லீவுல வயசுக்கு வந்து (அதாங்க, கைலி ஒரு வழியா கட்டத் தெரிஞ்சுகிட்டு . . .), அப்பவும் விடாம பூந்தா வெளையாடி, தெரு சண்டையெல்லாம் போட்டு, ஒரு வழியா . . . குவாட்டர்லி , பரிச்ச தேதி சொன்ன உடனே, படிக்கனும்ன்னு பல நாளு, சந்து முக்குல, காலியா இருக்கிற பல வீட்டு திண்ணையில . . . முடிவெடுத்து . . . மதியம் எக்ஸ்ட்ராவா தூங்கி , ஒரு நல்லா நாள்ல நைட்டு பத்து மணிக்கு மேல . . . படிக்கிறதுக்கு நாங்க எல்லாரும் வெளியில வந்துட்டோம் . . .

படிச்சோமா இல்லையான்னு தெரியாது . . . படிக்கிறது கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுது . . .
சரி, நடுவுல தூக்கம் வந்துரக் கூடாதுல்ல . . . அதனால, மறக்காம டீ காசு கேட்டு வாங்கிக்குவோம் (ரெகுலரா, எது செய்றியோ இல்லையோ இத மட்டும் கரக்டா கேளுங்க்ரத கேட்டு, கேட்டு . . . மறத்துப் போச்சு . . . இருந்தா மட்டும் ரொம்பத் தான் சொரணை . . . ?!!!)

ஒரு வழியா, பதினொரு மணிக்கு, டீ சாப்புட, லோகு கட, போக ஆரம்பிச்சது . . . அப்பிடியே, முனிச்சால முக்கு, தினமணி டாக்கீஸ்ன்னு எக்ஸ்டெண்டாச்சு . . . அப்பறமென்ன . . . பருத்திப் பாலு, சில நேரம் புரோட்டா சால்னா, பிட்டு, இட்லி . . . சாப்பாடு மட்டும் கூடிக்கிட்டே போச்சு . . . கூடவே, படிக்க வேண்டிய பாடமும் . . .
எக்ஸாம் முன்னாடி, எப்டியோ பாஸ் பண்ற லெவலுக்கு தேத்திருவோம் (பிட்டத் தான்)
ஒரு வழியா காலேஜு வந்த ஒடன, புது குரூப்பு, இப்ப கொஞ்சம் தைரியம் வந்துருச்சு . . .

தினமணி டாக்கீஸ் வரைக்கும் இருந்தது . . . டைரக்சன் மாறி, மிசன் ஹாஸ்பிடல், அப்படியே, பழைய மாகாளிப் பட்டி ரோட்டுக்கு எதுத்தாப்புல இருக்கிற அண்டர் கிரவுண்டு கடன்னு . . . ஏன்னா, சமூகத்துல சில பேரு, பொக போட்டு கொசுவ வெரட்டுற அரும்பணிய கையில எடுத்திருந்தாங்க . . . அவங்க பாதுகாப்பு கருதி அண்டர் கிரவுண்டு தான் இனிமேன்னு பஞ்சாயத்து பைசலாச்சு . . . ஆனா யாரையும், கம்பெல் பண்ண மாட்டோம்,

ஒரே ஒரு வார்த்த சொல்லுவோம்,

"மாமு, உன்னைய தம்மடிக்க கூப்ட்டா தப்பு, வர்றதுக்கு என்னடா ? கேடு . . . இந்த மயித்துக்கு நீ வீட்லயே படிச்சிர்க்கலாம்ல . . . ",

அதுக்கப்பறமும், வரலன்னா, அவேன் மதுரக்காரனே கெடையாது . . . !!!


இப்பிடியே, படிச்சு (??!!!), காலையில ரெகுலர், அன்னைக்கு மதியமே ஒரு அரியர், அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு ரெகுலர்ன்னு எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல . . .

அப்பறம், அந்தக் கும்பல்லயும், கும்மி அடிக்காம, படிச்சவங்க மேல படிக்கப் போக, எனக்கும் கலைவாணி அருள் கெடைக்க, நானும் மேல படிக்க (?!!!) கெளம்பிட்டேன் . . .

என்னைக்காவது ஊருக்கு வரும் போது எப்பவாவது, நைட்டு பத்து மணிக்கு மேல பட்டரைய போட்டோம்ன்னா . . .

பஸ் ஸ்டாண்டு, அங்க இங்கன்னு சுத்தி, வீடு வந்து சேரம் போது . . . காலையில மணி அஞ்சாயிர்க்கும் . . .

தூக்கத்துலயும் . . . கரக்ட்டா சொல்வாங்க . . . அப்படியே ரயில்வே ஸ்டேஷன்லயோ, பிளாட்பார்ம்லையோ செட்டில் ஆயிட்டீன்னா . . . சாப்பாடு, தங்குறது எல்லாமே மிச்சம்னு . . . வழக்கம் போல பேசாம போயி படுத்துற வேண்டியது தான் . . .

இப்படியே, ஒரு பத்து, பன்னெண்டு வருஷம் 'என்னோட ராவுகள்' இருந்துர்க்கு . . .
இன்னைக்கு, மதுரையே மாறிடுச்சுன்னு மதுரை சரவணன் எழுதி இருக்கிறதப் பாக்கும் போது . . . மேல சொன்னதெல்லாம் நெசந்தானான்னு தோணுது . . .

இதுக்கு தான் மாப்ள, நம்ம எல்லாம் ஊர்லையே இருந்துர்க்கனும் . . .

என்ன செய்ய எல்லாம் நேரப் ... ட ... ?